Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பட்டப்பகலில் உணவகம் ஒன்றில் வைத்து ஒருவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள நீதிமன்றம் அருகில் மாலை 4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் துரத்திக் கொண்டு வந்தது.
உயிருக்குப் பயந்து ஓடிவந்த அந்த நபர், அங்குள்ள குமரன் ஓட்டலுக்குள் தஞ்சம் புகுந்தார். ஆனால் அவரை துரத்தி வந்த கும்பல், ஓட்டலுக்குள்ளேயே வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இந்தக் காட்சிகள் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
தகவலறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. ஓட்டலில் சாப்பிட வந்தவர்கள் கண்முன்னே அரங்கேறிய இந்தக் கொடூரக் கொலை அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொலையான இளைஞர் யார், எதற்காக கொல்லப்பட்டார், கொலை செய்தவர்கள் யார் என்பன குறித்தெல்லாம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.